நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டின் அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட்டு எந்த இடத்திலும் வெற்றிபெறாதபோதும் நாம் தமிழர் கட்சி மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியாக பரிணமிக்கும் படிகளில் ஏற்றம் கண்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்தக்கட்சி சகல தொகுதிகளிலும் நேற்றுமாலை வரை பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 15 லட்சத்து 34 ஆயிரத்து 755 வாக்குகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வந்தது மாத்திரமல்லாமல் சமூக வலைத்தளங்களில் பலரது விருப்பத்துக்குரிய அமைப்பாக வளர்ச்சியடைந்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இம்முறை தேர்தலில் எந்த கட்சியுடனும் சேர்ந்து போட்டியிடாமல் எந்த - பெரிய - ஊடகங்களின் பலமும் இல்லாமல் நாம் தமிழர் கட்சி களத்தில் குதித்திருந்தது.
கிடைக்கப்பெற்றிருக்கும் தகவல்களின்படி, பிரதான கட்சிகள் வெற்றிபெற்ற இடங்களில் மூன்றம் நான்காம் இடங்களில் நாம் தமிழர் கட்சியே கோலாச்சியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக, திண்டுக்கல் தொகுதியில் சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற்ற நடிகர் மன்சூர் அலிகான் நான்காவது இடத்திலிருக்கிறார்.
தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காலத்தில் மக்களோடு நின்று சேவை செய்தது உட்பட பல மக்கள் நலப்பணிகளின் ஊடாக மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற்று வந்த நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தல் உண்மையிலேயே வெற்றிதான் என்றும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளை பிரதான கட்சிகளுடன் சேர்த்துவைத்து வெற்றியை சோதனை செய்யக்கூடாது. அவர்களை அரசியல் வளர்ச்சிப்பாதையில் வைத்தே மதிப்பீடு செய்யவேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
