தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சிப்பிளவுகளினால் கட்சிக்கு உரித்துடையவர்கள் யார் என்ற பெரும்பிரச்சினை கிளம்பியது. பாரம்பரிய கட்சி சின்னத்துக்கு உரித்துடையவர்கள் யார் என்ற சிக்கல் நீதிமன்றம்வரை சென்றது. இவ்வாறானதொரு பின்னணியில், கட்சியிலிருந்து பிரிந்து சென்று தாங்கள்தான் ஜெயலலிதாவினுடைய வாரிசுகள் என்று மக்களிடம் வாக்கு கேட்ட டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக அணி நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத் தேர்தலில் பலத்த அடி வாங்கியிருக்கிறது.
அ.தி.மு.க. என்ற பெரும் கட்சியையே சாய்ப்போம் என்று சவால்விட்டு களமிறங்கிய டி.டி.வி. தினகரன் அணியை முதல் முறையாக கட்சி தொடங்கிய கமல்ஹசனின் மக்கள் நீதி மையம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகளே முந்திச்சென்றிருக்கின்றன.
டி.டி.வி. தினகரன் அணியினால் சில இடங்களில் அ.தி.மு.கவின் வெற்றி பாதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவர்களால் எந்த இடத்திலும் ஒரு ஆசனத்தையும் வெற்றிகொள்ளமுடியவில்லை.
இந்த தோல்வி குறித்து டி.டி.வி. தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் - மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம். 'அம்மா' கற்றுத்தந்த துணிவோடு, பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கத் தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும் - என்று கூறியுள்ளார்.
