ஆஸ்திரேலியத் தலைநகரான கான்பரா அமைந்துள்ள ACT பிராந்தியத்தில் போதைப்பொருளான கஞ்சா பயன்பாட்டை அனுமதிக்கும் சட்டத்தை ACT பிராந்திய நாடாளுமன்றம் இன்று நிறைவேற்றியது.
இந்த பிராந்தியத்தில் வாழும் மக்கள் சிறியளவிலான கஞ்சாவைப் பயன்படுத்துவதையும், கஞ்சா வைத்திருப்பதையும், கஞ்சா வளர்ப்பதையும் இந்த சட்டம் அனுமதிக்கிறது.
ஆஸ்திரேலிய நாட்டில் இப்படி கஞ்சா பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாளுமன்றமாக ACT நாடாளுமன்றம் திகழ்கிறது. ACT பிராந்தியத்தில் வாழும் 18 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் 50 கிராம் கஞ்சாவை வைத்திருக்க முடியும்; ஒருவர் இரு கஞ்சா செடிகள்வரை வளர்க்கலாம். ஆனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கஞ்சா வளர்ப்பு மற்றும் பயன்பாடு தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா Labor அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு Greens கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் 2020 (அடுத்த ஆண்டு) ஜனவரி மாதம் 31தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
ஆனால் தலைநகரான கான்பரா அமைந்துள்ள ACT பிராந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தில் தலையிடவும், அந்த சட்டத்தை ரத்து செய்யவும் பெடரல் அரசுக்கு அதிகாரம் உண்டு. மேலும் பெடரல் அரசு சட்டப்படி கஞ்சா பயன்படுத்தல் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதாலும் பெடரல் அரசு ACT பிராந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்துசெய்யக்கூடும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.
