தமிழ் குடும்பம் தொடர்பில் ஐ.நா. முன்வைத்த கோரிக்கையை பொருட்படுத்தாத ஆஸ்திரேலியா!

The family of four are currently the only people detained on Christmas Island.

The family of four are currently the only people detained on Christmas Island. Source: Supplied

கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருக்கும் பிரியா-நடேஸ் குடும்பத்தை அங்கிருந்து விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த வேண்டுகோளை ஆஸ்திரேலிய அரசு புறக்கணித்துள்ளது.

குறித்த தம்பதியினரும் அவர்களது இரு பிள்ளைகளும் நாடுகடத்தலுக்கெதிராக தொடர்ந்தும் போராடிவரும் நிலையில் அவர்களை 30 நாட்களுக்குள் குறித்த முகாமிலிருந்து விடுவித்து சமூகத்தில் வாழ அனுமதிக்குமாறும் அங்கிருந்துகொண்டு அவர்கள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் சபை கேட்டுக்கொண்டிருந்தது.

பிரியா-நடேஸ் குடும்பத்தின் சார்பில் வாதாடிவரும் சட்டத்தரணி கரீனா ஃபோர்ட்ஸ், ஐ.நாவின் தலையீட்டை கோரியிருந்த நிலையில் அக்டோபர் 1ம் திகதி அவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பதில் கடிதத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபை இதனைக் குறிப்பிட்டிருந்தது.

ஐ.நா சபை இக்கோரிக்கையை விடுத்து இன்றுடன் 30 நாட்கள் முடிகின்ற நிலையில் அரசு இதனை பொருட்படுத்தாமல்விட்டுள்ளது.

இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலிய அரசு ஐ.நாவின் கோரிக்கையை நிறைவேற்றாதமையானது புதிய விடயமல்லவென்றும், கடந்த பல ஆண்டுகளாகவே ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூற்றுக்களையும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்வதும் கவனிப்பதும் மிகக்குறைவாகவே உள்ளது எனவும் அகதிகள் விவகாரங்களுக்கான பிரபல சட்டத்தரணி Mary Crock தெரிவித்தார்.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா - நடேஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர் சுமார் ஒன்றரை வருடங்களாக மெல்பேர்னிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில், சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் தீர்ப்புவழங்குவதற்கு கால அவகாசம் எடுத்திருந்த பின்னணியில் தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் என செப்டம்பர் 19ம் திகதி நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது.

இதன்படி பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்திருந்த பின்னணியில் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலேயே தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


2 min read

Published


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now