கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியா - நடேசலிங்கம் குடும்பத்தினரை முகாமிலிருந்து விடுதலை செய்யவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை விடுத்த கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசு நிராகரித்துள்ளது.
தற்போது கிறிஸ்மஸ் தீவு அகதிமுகாமில் உள்ள பிரியா - நடேசலிங்கம் குடும்பத்தினர் தொடர்பான வழக்கு விவகாரம் முடிவடையும் வரையில் அவர்கள் அங்குதான் தங்கவைக்கப்பட்டிருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரி கூறியுள்ளார்.
பிரியா - நடேசலிங்கம் தம்பதிகளின் மகள் தருணிகாவின் வழக்கு தொடர்பில் நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணைகளின் அடிப்படையில் இந்த குடும்பம் ஆஸ்திரேலியாவில் தங்கமுடியுமா என்ற கேள்வி தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இந்த வழக்கிற்குரிய திகதி இன்னும் முடிவெடுக்கப்படாதநிலையில் அதற்கான நடவடிக்கைகளில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்த நீதிமன்ற முடிவு கிடைக்கும்வரைக்கும் பிரியா - நடேசலிங்கம் குடும்பத்தினரை தடுப்புமுகாமில் வைத்திராமல் விடுதலை செய்யுமாறு ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைகள் குழு ஆஸ்திரேலிய அரசிடம் இடைக்கால ஏற்பாட்டிற்கு கோரிக்கை விடுத்திருந்தது.
அதனை பிரியா - நடேசலிங்கத்தின் வழக்கை நடத்துகின்ற வழக்கறிஞருக்கும் தெரியப்படுத்தியிருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் இந்த இடைக்கால ஏற்பாட்டுக்கோரிக்கை தமக்கு கிடைத்ததாக உறுதி செய்த ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு குறித்த குடும்பம் தொடர்ந்தும் கிறிஸ்மஸ் தீவு முகாமிலேயே தங்கவைக்கப்படுவார்கள் என கூறியுள்ளது.
