தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக விமானத்தினுள் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளர் Jasmine Pilbrow மீதான வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை(02.09.2016) நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்காக மெல்பேர்ணிலிருந்து டார்வின் செல்லும் Qantas விமானத்தில் ஏற்றப்பட்டார்.
இதைத் தடுத்து நிறுத்துவதற்காக, பயணச்சீட்டு ஒன்றைப் பெற்று குறித்த விமானத்தில் ஏறிய Jasmine Pilbrow என்ற அகதிகள் செயற்பாட்டாளர், விமான இருக்கையில் அமர மறுத்து தனது எதிர்ப்பினை வெளிக்காட்டினார்.
Jasmine Pilbrow வின் நடவடிக்கையைப் பார்த்து அங்கிருந்த மேலும் இருவரும் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.
இதையடுத்து குறித்த புகலிடக்கோரிக்கையாளர் நாடுகடத்தப்படுவதிலிருந்து தடுக்கப்பட்ட அதேநேரம் Jasmine Pilbrow மீது சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கின் மீதான விசாரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மெல்பேர்ணின் Broadmeadows Magistrates நீதிமன்றில் நடைபெறவுள்ளது.
Jasmine Pilbrow நடத்திய இப்போராட்டத்திற்கு இரண்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்பின்னணியில் Jasmine Pilbrowவுக்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் அகதிகள் செயற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை காலை ஒன்றுகூடி Vigil-அமைதிப்போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
