ஆஸ்திரேலிய அரசாங்கத்தினால் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சாந்தரூபன் தங்கலிங்கம் என்பவர் நாடு கடத்தப்படுவதை தடுக்கக்கோரும் இரண்டாவது கவனயீர்ப்பு போராட்டம், இன்று மெல்பேர்னில் நடைபெறுகிறது.
மெல்பேர்ன் Broadmeadows பகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு மணிமுதல் இந்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிவந்த சாந்தரூபன் தங்கலிங்கத்தின் புகலிடக்கோரிக்கை, கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அரசினால் நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, அவரது மனு மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கப்பட்டு அதுவும் நிராகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, Federal நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு குறித்த வழக்கு அங்கே தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து குறித்தநபர் குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பேர்த் மற்றும் மெல்பேர்ன் குடிவரவுத்தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி அவர் நாடுகடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நபர் நீண்டகாலமாக விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் என்றும், பல சம்பவங்களில் காயமடைந்தவர் என்றும், இந்த காயங்களினால் தற்போதும் ஒரு கால் இயலாதநிலையிலேயே உள்ளார் என்றும், இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் நாடுகடத்தப்படும்பட்சத்தில் இலங்கையில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என இந்த குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த பின்னணியில், சாந்தரூபன் தங்கலிங்கம் உட்பட ஏனைய புகலிடக்கோரிக்கையாளர்கள் இவ்வாறு நாடுகடத்தப்படக்கூடாது என வலியுறுத்தி கடந்த வாரம், Dandenong பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இன்றைய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
