நூறு குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 230 பேர் கேரளக்கடற்கரையிலிருந்து நியூசிலாந்து நோக்கிய படகில் புறப்பட்டு வந்துகொண்டிருப்பதாக இந்திய பொலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் தமிழர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுடில்லியை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்த விசாரித்ததன் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாகவும் பொலீஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி கேரளாவின் முன்னம்பம் கடற்கரை பகுதியிலிருந்த புறப்பட்டுள்ள இந்த படகு சுமார் 11,000 கிலோ மீற்றர் பயணம் செய்து நியூசிலாந்துக்கு சென்று சேரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் கொச்சி பகுதிக்கு வந்து தங்கியிருந்து பல நாட்கள் திட்டமிட்டு புறப்பட்டுள்ள அனைவரும் தலைக்கு இந்திய மதிப்பின்படி ஒன்றரை முதல் மூன்று லட்சம் ரூபாவரை ஆட்கடத்தல்காரர்களுக்கு கொடுத்துள்ளார்கள் என்று பொலீஸ் விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.
படகில் ஏறப்போகின்ற கடைசி நேரத்தில், ஆட்களின் பாரத்தை படகு தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தினால் 19 பேர் இந்தப்பயணத்தில் இணைந்துகொள்ளமுடியவில்லை என்றும் படகில் புறப்பட்டவர்களும்கூட தங்களது பெருந்தொகையான பைகளை கரையிலேயே கைவிட்டு சென்றுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதியில் பெருந்தொகையான பைகளை கண்ட பொலீஸார் அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில் படகுச்சொந்தக்காரர் மற்றும் சிலரை கைது செய்தபோதுதான் சகல விவரங்களும் தெரியவந்துள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.
