அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின்படி, பப்புவா நியூ கினியிலிருந்து மேலும் சில அகதிகள் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இரு தமிழ் இளைஞர்கள், 5 ஆப்கானியர்கள், இரு பாகிஸ்தானியர்கள் மற்றும் 4 மியன்மார் நாட்டவர்கள் ஆகியோரே இவ்வாறு அமெரிக்கா புறப்பட்டுள்ளதாக Refugee Action Coalition அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 2017ம் ஆண்டு பப்புவா நியூகினியின் மனுஸ் தடுப்பு முகாமிலிருந்து Port Moresby இடைத்தங்கல் முகாமுக்கு மாற்றப்பட்டிருந்த இவர்கள் அங்கிருந்து நேற்றையதினம் அமெரிக்கா புறப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்த 378 அகதிகள் அமெரிக்காவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அமெரிக்கா செல்லும் அகதிகள்,அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு, முதல் 3 மாதங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்படும் அதேநேரம், ஒரு வருடத்தின் பின் அவர்கள் அங்கு நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்குத் தகுதி பெறுவர். பின் 5 வருடங்கள் கழித்து இவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
