இந்தக் குடும்பம் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிலோயெலா நகருக்குத் திரும்பக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தருணிகாவிற்கு வீசா வழங்கவில்லை என்று இந்தக் குடும்பத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் கூறுகிறார்கள்.

தருணிகாவின் பெற்றோர்கள் பிரியா, நடேஸ் மற்றும் அவரது மூத்த சகோதரி கோபிகா ஆகியோருக்கு மூன்று மாத இடைக்கால வீசா வழங்குவதற்கு, அமைச்சர் (Federal Circuit Court) நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
இந்தக் குடும்பத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களுக்கு அமைச்சரின் முடிவு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. “இவர்கள் நான்கு பேருக்கும் வீசா வழங்குவதற்கு அமைச்சரிடம் அதிகாரம் இருக்கிறது. ஆனால் மூவருக்கு வீசா வழங்கி விட்டு, சிறுமி தருணிகாவிற்கு மட்டும் வீசா வழங்காமல் இருப்பது எமக்கு வினோதமாகப் படுகிறது” என்று இவர்களது குடும்ப நண்பரும் நீண்ட நாள் ஆர்வலருமான Angela Fredericks கூறினார்.

கோபிகா மற்றும் தருணிகா இருவருமே குயின்ஸ்லாந்தில் பிறந்தவர்கள். இருவருமே பிலோயெலா நகருக்கு செல்வதையே விருப்பமாகக் கொண்டுள்ளார்கள்.
இந்தக் குடும்பம் பிலோயெலா திரும்ப வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை வைத்து பதாகைகள் எழுப்பப்பட்டுள்ளன, அத்துடன் இன்றைய தினசரிகளில் முழுப் பக்க விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பின்னணியில் குடிவரவு அமைச்சர் குடும்பத்தில் மூன்று பேருக்கு மட்டும் வீசா வழங்கியிருப்பது நோக்கத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
