தமிழகம், திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
சுஜித்தை மீட்கும் பணி 80 மணி நேரத்துக்கு மேல் நீடித்துவந்த நிலையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து துர்நாற்றம் வந்ததாக அவர் தெரிவித்தார்.
குழந்தையை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளபோதிலும் அக்குழந்தையின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியரின் இரண்டாவது மகன்தான் சுஜித்.
வீட்டிற்கு அருகே சோளம் சாகுபடி செய்திருந்த சுஜித்தின் தந்தை 5 வருடங்களுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைத்தார். ஆனால் அதில் தண்ணீர் வராததால் நிலமட்டத்துடன் இருந்த கிணற்றை பிளாஸ்டிக் மூடியால் மூடி வைத்துவிட்டார்.
இந்த நிலையில் அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 5.45 மணியளவில் சோளக்காட்டு வழியாக தனது சகோதரனுடன் சென்று கொண்டிருந்த சுஜித் ஆழ்துளை கிணறு இருப்பதை அறியாது அதன் மூடி மீது மிதித்துவிட அது உடைந்து ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.
இதையடுத்து சுஜித்தை உயிருடன் மீட்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுஜித்திற்காக தமிழகம் மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் பிரார்த்தனைகள் செய்யப்பட்டநிலையில் இக்குழந்தையின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
