தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் தமக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டிவந்தநிலையில், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் போராடி வந்தனர்.
இதன் உச்சகட்டமாக கடந்த மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கு பெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார்.
