மெல்பேர்னை தளமாகக்கொண்டு இயங்கும் Vortex Air தனியார் - வர்த்தக - விமானநிறுவனத்தின் சிறிய ரக விமானத்தை தூக்கத்தில் ஓட்டிச்சென்ற விமானி தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த நவம்பர் 8 ஆம் திகதி இடம்பெற்றதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
விமானியின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட மறுத்துள்ள Vortex Air விமான நிறுவனம், சம்பவம் நடந்த அன்று குறிப்பிட்ட விமானி மாத்திரமே அந்த சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தார் என்றும் விடுப்பில் சென்றிருந்த அந்த விமானியின் முதல் நாள் வேலையின்போதுதான் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.
காலை 6.20 மணிக்கு விமானத்தை எடுத்தக்கொண்டு தனியே பறந்த விமானி கிட்டத்தட்ட 46 கிலோ மீற்றர்கள் வானில் தூக்கத்திலிருந்துள்ளார்.
விமானம் இறங்கவேண்டிய இடத்தையம் தாண்டி தொடர்ந்து பறப்பில் ஈடுபட்டிருந்ததையடுத்து அவரைத்தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் பயனளிக்காத நிலையில் வெகு நேரத்துக்கு பிறகு கட்டுப்பாட்டு அறையுடன் அவர் தொடர்புகொள்ளமுடிந்தது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது விமானி பறப்பின்போது தூங்கியமை தெரியவந்துள்ளது.
Tasmania - Devonport ற்கும் King Island - Bass Strait ற்கும் இடையில் பறந்த விமானத்திலேயே விமானி மேற்கண்டவாறு தூக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.
குறித்த விமானி தூக்கத்திலிருந்தபோது autopilot இயங்கு முறையில் விமானம் இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ள Vortex Air நிறுவனம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கூறியுள்ளது.
