ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் நிகழ்ந்த அனைத்து மரணங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படவேண்டுமென Australian Border Force முன்னாள் தலைவர் Roman Quaedvlieg தெரிவித்துள்ளார்.
தற்போது இருக்கும் நடைமுறைகள் விமர்சனங்களுக்கும் ஊகங்களுக்கும் வழிவகுக்கின்றனவே தவிர அங்குள்ள உண்மையான பிரச்சினைகள் என்ன என்பது குறித்த தெளிவினை உண்டாக்கத் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் நடந்த அனைத்து மரணங்களும் ஒரு ஆஸ்திரேலிய நீதிபதியாலோ அல்லது மரண விசாரணை அதிகாரியாலோ விசாரிக்கப்பட வேண்டுமென Roman Quaedvlieg வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாம்களில் வாழ்ந்துவந்த சுமார் 12 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.
ஆனால் இதில் மேலதிக சிகிச்சைக்காக பிரிஸ்பேர்ன் கொண்டுவரப்பட்டபோது மரணமடைந்த Hamid Kehazaei என்பவரது மரணம் மட்டுமே மரணவிசாரணை அதிகாரியால் விசாரிக்கப்பட்டிருந்ததுடன் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை வழங்கியிருந்தால் Kehazaei-இன் மரணத்தைத் தடுத்திருக்கலாம் என அந்த அதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
