ஆஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் மனுஸ் மற்றும் நவுறு அகதி முகாம்களுக்கு கொண்டு செல்லப்படும் அகதிகள் அங்கு எத்தனை நாட்கள் தடுத்துவைக்கப்படுவார்கள் என்ற காலவரையறை தமது ஆட்சியில் நிர்ணயம் செய்யப்படாது என லேபர் கட்சி தலைவர் Bill Shorten தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய எத்தனிப்பவர்களை மேற்படி தீவுகளில் அமைந்துள்ள அகதிமுகாம்களில் தடுத்துவைப்பது என்ற திட்டத்தை முன்னாள் பிரதமர் கெவின் ரட் தலைமையிலான லேபர் கட்சி நடைமுறைப்படுத்தியிருந்தது.
இந்த திட்டத்தின்படி, அங்கு கொண்டு செல்லப்படும் அகதிகள் எந்த முடிவுமின்றி காலவரையறையற்ற நீடித்த தடுப்புக்காவலில் இருக்கவேண்டிய நிர்ப்பந்தமே தற்போது நிலவுகிறது.
அந்த அகதிகளை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதா அல்லது மூன்றாவது நாட்டில் கொண்டு சென்று குடியமர்த்துவதா அல்லது ஆஸ்திரேலியாவுக்குள் உள்வாங்குவதா என்று எந்த முடிவையும் குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ளவேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் ஆஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்துக்கு தற்போது கிடையாது.
ஆகவே, இந்த காலப்பகுதியை மூன்று மாதமாக வரையறுத்து, குறிப்பிட்ட அகதிகள் குறித்து உடனடியான முடிவொன்றை குடிவரவு திணைக்களம் அறிவிக்கவேண்டும் என்ற யோசனையை லேபர் கட்சி தனது ஜூலை மாத தேசிய மாநாட்டில் விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் கடல் கடந்த தடுப்பு முகாமில் ஒருவர் இத்தனை நாட்கள்தான் தடுத்து வைக்கப்பட முடியும் என்ற காலவரையறை எதனையும் தாம் விதிக்கப்போவதில்லை என Bill Shorten தெரிவித்தார்.
மேலும் ஆளும்தரப்பு குற்றம் சாட்டுவதைப்போல் எல்லைப்பாதுகாப்பு விடயத்தில் நெகிழ்வுத்தன்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஆட்கடத்தல் வியாபாரத்திற்கு தமது கட்சி ஒருபோதும் துணை போகாது எனவும் அவர் கூறியுள்ளார்.
