ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஆகக்குறைந்தது 18 பேர் பலியாகியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்னும் பல இடங்களில் பற்றியெரியும் தீயை அணைக்கும் பணிகள் தொடர்கின்றன.
இந்தப்பின்னணியில் நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைப்பதற்கு போராடிவருகின்ற தன்னார்வ தொண்டர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவச தொலைபேசி சேவையை வழங்குவதாக Telstra அறிவித்துள்ளது.
அதாவது, தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தன்னார்வ தொண்டர்களின் டிசெம்பர் மற்றும் ஜனவரி மாத கைத்தொலைபேசி செலவுகளை முற்றாக நீக்குவதாக Telstra பிரதான பணிப்பாளர் Andy Penn தெரிவித்துள்ளார்.
கைத்தொலைபேசி அழைப்பு செலவு மற்றும் இணையத்தொடர்பு அனைத்தையும் இந்த தன்னார்வ தொண்டர்களுக்கு தாங்கள் இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளதாக Andy Penn கூறியுள்ளார்.
தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள குறிப்பிட்ட தன்னார்வ தொண்டர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொலைபேசி தொடர்புகளை ஏற்படுத்தவேண்டியது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தாங்கள் உணர்வதாகவும் இந்தமாதிரியான ஒரு சூழ்நிலையில் தன்னார்வ தொண்டர்களுக்கு உதவி செய்வது அனைவரதும் கடமை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தங்களது சமூகத்தை பாதுகாப்பதற்காக களத்தில் நின்று பணியாற்றுபவர்களுக்கு தங்களது உதவி பெரும் ஆதரவாக அமையும் என்று நம்புவதாகவும் Andy Penn கூறியுள்ளார்.
