விக்டோரியாவில் இரண்டாம்கட்டப்பரவல் ஏற்பட்டதையடுத்து வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கு முற்றாக தடைசெய்யப்பட்ட மெல்பேர்ன் சர்வதேச விமானநிலையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
விக்டோரியாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வெளிநாட்டிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களை அனுமதிப்பதென்ற தீர்மானம் எட்டப்பட்டதையடுத்து, வெளிநாடுகளில் சிக்கியிருந்த பலர் இன்றுமுதல் மெல்பேர்னுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி முதலாவதாக UL604 என்ற SriLankan Airlines விமானம் கொழும்பிலிருந்து மெல்பேர்னை வந்தடைந்தது.
சுமார் 5 மாதங்களின் பின் மெல்பேர்ன் விமானநிலையத்தை வந்தடைந்த முதலாவது பயணிகள் விமானம் இதுவாகும்.
குறித்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் உட்பட சுமார் 253 ஆஸ்திரேலியர்கள் 8 விமானசேவைகளினூடாக இன்றையதினம் நாடுதிரும்புகின்றனர்.
இவர்கள் அனைவரும் மெல்பேர்னிலுள்ள 11 ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
தனிமைப்படுத்தலுக்கான 14 நாட்கள் தங்குமிட செலவு தலா 3500 டொலர்கள் - ஏனைய மாநிலங்களில் நடைமுறையிலுள்ளதுபோல - பயணிகளே செலுத்தவேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கான பாதுகாப்பு பணி மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்காக மெல்பேர்ன் விமானநிலையத்திலிருந்து ஹோட்டல்கள்வரை சுமார் முன்னூறு பொலீஸாரும் 220 பாதுகாப்பு படையினரும் விசேட பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
