மெல்பேர்னில் நடைபெற்ற Black Lives Matter ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற மற்றுமொரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபர், வைரஸ் தொற்றுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருக்க சாத்தியமில்லை என்றும், ஆர்ப்பாட்டத்தின்போதோ அல்லது அதற்குப் பின்னரோ இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, மேலும் பலருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் பல்வேறு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை விக்டோரியாவில் இன்றையதினம் குறித்த நபர் உட்பட புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, மாநிலம் முழுவதும் மொத்தமாக 81 கோவிட்-19 நோயாளிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
