மூன்று குழந்தைகளுடன் மணிக்கு 193 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்ததாக கூறப்படும் நபர் ஒருவரை விக்டோரிய பொலீஸார் கைது செய்துள்ளார்கள்.
விக்டோரிய - நியூ சவுத் வேல்ஸ் எல்லைப்பிரதேசமான Wagga Wagga அருகே 100km/h வேக கட்டுப்பாடுள்ள சாலையில் நேற்று பிற்பகல் மின்னல்வேகத்தில் சென்ற இந்த வாகனத்தை பொலீஸார் அவதானித்துள்ளனர். ஆனால், கலைத்துச்சென்று பிடிப்பதற்குள் அந்த வாகனம் வேகமாக சென்று மறைந்துவிட்டது.
சற்றுநேரத்தின் பின்னர் அப்பிரதேசத்திலுள்ள மைதானம் ஒன்றுக்கு அருகில் இந்த வாகனம் அவதானிக்கப்பட்டதை அடுத்து, வாகனத்தை சுற்றிவளைத்த பொலீஸார் ஓட்டுனரை கைது செய்துள்ளனர். அப்போதும்கூட,குறிப்பிட்ட ஓட்டுனர் பொலீஸாரின் பிடியை மீறி மைதான வேலிகளையெல்லாம் பிய்த்துக்கொண்டு வாகனத்தோடு ஓடியிருக்கிறார். பின்னர் ஒருவாறு அந்நபரைக் கைதுசெய்ததுடன், வாகனத்தை சோதனை செய்தபோதுதான் அதில் மூன்று குழந்தைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைதுசெய்யப்டட்ட 32 வயது நபர் பொலீஸ் காவலில் உள்ளார். பிள்ளைகள் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் சிட்னியில், போதையில் வாகனம் ஓட்டிய நபர் பாதசாரிகள் நடக்கும் பாதையில் சென்றுகொண்டிந்த சிறுவர்கள் மீது மோதியதில் நான்கு சிறுவர்கள் படுகொலையானது குறிப்பிடத்தக்கது.
