மெல்பேர்னில் நான்கு பொலீஸார் கொல்லப்பட்ட கோர விபத்துடன் தொடர்புடைய truck ஓட்டுனருக்கு எதிராக பொலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள்.
விபத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் வாகனத்தை ஓட்டினார் என்ற அடிப்படையில் நான்கு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்ட truck ஓட்டுனருக்கு எதிராக பொலீஸார் பதிவுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்று அதிவேகமாக காரில் சென்ற ஒருவரை பொலீஸார் மறித்து Eastern நெடுஞ்சாலை ஓரத்தில்வைத்து சோதனை செய்யத்தொடங்கிய 50 நிமிடங்களின் பின்னர் அவ்வழியாக வந்த truck- பொலீஸார் மீது மோதியது. சம்பவத்தில் நான்கு பொலீஸார் பலியானார்கள்.
சம்பவம் இடம்பெற்ற நாள் முதல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த truck ஓட்டுனர் நான்கு நாட்களாக பொலீஸ் விசாரணைகளுக்கு முகங்ககொடுக்கமுடியாத நிலையிலிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரிடம் விசாரைணகளை மேற்கொண்ட பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பொலீஸார் குறித்த நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது அவர் பிணையில் செல்வதற்கு விண்ணப்பித்திருக்கவில்லை என்பதுடன் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 1 இடம்பெறவுள்ளது.
நீதிமன்ற விசாரணையின்போது ஓட்டுனர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காது தலையைக் குனிந்தபடி காணப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை அவர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், மருத்துவ ரீதியாக இனங்காணப்பபடாத மனநிலை கோளாறு அவருக்கு ஏற்கனவே இருந்திருக்கலாம் எனவும் ஓட்டுனரின் வழக்கறிஞர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுஒருபுறமிருக்க விபத்து இடம்பெற்ற பின்னர் truck-ஐ சோதனை செய்தபோதும் truck ஓட்டுனரின் வீட்டை சோதனை செய்தபோதும், குறிப்பிட்ட ஓட்டுனர் போதைப்பழக்கமுள்ளவர் என்று கண்டுபிடிக்கப்பட்டதாக சில ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
ஆனால், சம்பவம் இடம்பெற்றபோது truck ஓட்டுனர் போதைக்கு அடிமையாக இருந்தார் என்பதையும் நிதானம் தவறிய நிலையில் வாகனத்தையோட்டியிருந்தார் என்பதையும் பொலீஸார் நீதிமன்றத்தில் நிரூபிக்கவேண்டியுள்ளார்கள் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பொலீஸார் பதிவுசெய்துள்ள குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் உறுதிசெய்யப்பட்டால், குறிப்பிட்ட ஓட்டுனருக்கு 20 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
