மூட்டுவலி மற்றும் முழங்கால் மூட்டழற்சிக்கு மஞ்சள் (Turmeric ) சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தப்படலாம் என்று ஆஸ்திரேலியாவின் டஸ்மேனியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழங்கால் மூட்டழற்சியுடைய(knee osteoarthritis) சுமார் எழுபது பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த முடிவு தெரியவந்துள்ளதாக அமெரிக்காவின் பிரபலமான மருத்துவ சஞ்சிகையில்-Annals of Internal Medicine- தகவல் வெளியாகியுள்ளது.
சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தலா இரண்டு மஞ்சள் மாத்திரைகள் வீதம் 12 வாரங்கள் வழங்கப்பட்டு, அவர்களது வீக்கம் மற்றும் எலும்புகளில் சோதனை செய்யப்பட்டது.
சோதனையின் முடிவில், எலும்புக்கட்டமைப்பில் எந்த சேதமும் விளைவிக்காமல் - பாரதூரமான உப விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல் - வலியை குறைத்திருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சளில் உள்ள Curcumin என்ற மூலக்கூறு வீக்கத்தினை கட்டுப்படுத்துவது மாத்திரமல்லாமல், நுண்ணிய கிருமிகளுக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்றும் ஆய்வினை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
மஞ்சளில் உள்ள மருத்துவக்குணம், ஞாபக மறதி, மன அழுத்தம், சுவாசப்பிரச்சினைகள் ஆகியவற்றிற்கும் தகுந்த நிவாரணி என அண்மைக்காலத்தில் ஆய்வுமுடிவுகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டஸ்மேனியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு வெளியாகியுள்ள Annals of Internal Medicine என்ற அமெரிக்க சஞ்சிகை உலக அளவில் நம்பகத்தன்மை கொண்டதும் பலராலும் மருத்துவ ரீதியில் மேற்கோள்காட்டப்படுகின்ற பல அரிய புதிய மருத்துவ தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் ஆவணமும் ஆகும்.