ஆஸ்திரேலிய விமானநிலையங்களில் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டமாற்றம் கொண்டவரப்படவுள்ளதாக பிரதமர் Malcolm Turnbull அறிவித்துள்ளார்.
இதன்படி விமானநிலையங்களிலுள்ள காவல்துறை அதிகாரிகள், அங்கு வருபவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதிக்க முடியும் என்பதுடன் தேவையேற்படின் அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறும் பணிக்க முடியும்.
இது தவிர முழு உடலையும் பரிசோதிப்பதற்குரிய scanners மற்றும் அதிநவீன X-ray கருவிகள் போன்றன நாட்டின் அனைத்து விமானநிலையங்களிலும் நிறுவப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக 140 பயங்கரவாத குற்றத்தடுப்பு அதிகாரிகள் நாடு முழுவதுமுள்ள விமானநிலையங்களில் பணிக்கமர்த்தப்படுவதுடன் இவர்களுக்கான புலனாய்வு உதவிகளை 50 அதிகாரிகள் வழங்கவுள்ளனர்.
மேலும் நாட்டுக்குள் வரும் தபால் பொதிகள் அதிநவீன கருவிகளின் உதவியுடன் சோதனையிடப்படவுள்ளது.
கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இப்புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கென பல மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் சுரபயா நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் Malcolm Turnbull, தீவிரவாத அச்சுறுத்தல் எங்கும் நிலவுவதால் நாட்டிலுள்ள விமானநிலையங்களின் பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியமாவதாகக் கூறினார்.
