சீனா தனது சொந்த நாட்டு மக்கள் ஒரு மில்லியன் பேரை, இரகசிய முகாம்களிலும் வீட்டுக்காவலிலும் வைத்திருப்பதாக புதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில் சுமார் 20 ஆஸ்திரேலியர்கள் அல்லது ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவில் Uighur சிறுபான்மை முஸ்லிம் மக்கள் சுயாட்சியுடன் வாழுகின்ற பிராந்தியத்தை சீன அரசாங்கம் இரகசிய சிறைச்சாலையாக பேணிவருவதாகவும், மதத்தீவிரவாதம் தலைதூக்கக்கூடாது என்பதற்காகவும், சமூக ஸ்திரத்தன்மையை பேணுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுப்பதாக கூறிக்கொண்டு மிகப்பெரிய மனித உரிமைகள் மறுப்பினை மேற்கொண்டுவருவதாகவும் கடந்த பல மாதங்களாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்தன.
சீன அரசாங்கம் Uighur மக்கள் உட்பட சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுபான்மை முஸ்லிம் மக்களை இரகசிய முகாம்களில் தடுத்துவைத்திருப்பதாகவும், மேலும் பலரை அரசியல் மற்றும் கலாச்சார காரணங்களுக்காக கைது செய்து மீள் கல்விக்கு உட்படுத்துவதாக கூறி தடுத்துவைத்திருப்பதாகவும் ஐ.நா. அமைப்பும் தெரிவித்திருந்தது.
சீன அரசு, சிறுபான்மை முஸ்லிம் மக்கள் தங்களது மதத்தை பின்பற்றுகின்ற ஒரே காரணத்துக்காக அவர்களை மர்மமான முறையில் தடுப்புக்கு கொண்டு செல்கிறது. இவ்வாறு காணாமல் போகின்றவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்களின் உறவினர்களுக்கே எதுவும் தெரியவில்லை. Uighur சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த நூறு மாணவர்கள் வெளிநாட்டில் மேற்படிப்பை முடித்துவிட்டு நாடுதிரும்பிய நிலையில் அவர்களும் காணாமல்போயுள்ளார்கள் - என்றும் ஐ.நா. குறிப்பிட்டிருந்தது.
ஆனால் இவ்வாறு இரகசிய முகாம்கள் நடத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டை சீன அரசு தொடர்ந்தும் மறுத்துவந்தது.
இந்தப்பின்னணியில் சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியில் சுமார் 1மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சீன அரசு ஆவணங்கள் பல கசிந்துள்ளன.
இந்த ஆவணங்கள் சீன அரசியல் வட்டார உறுப்பினர் ஒருவர் ஊடாக பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த ஆவணங்கள் போலியானவை என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆகக்குறைந்தது 20 ஆஸ்திரேலியர்கள் அல்லது ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள் சீனாவில் முகாம்களிலும் வீட்டுக்காவிலும் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து கடந்த 2017ம் ஆண்டு முதலே இங்குள்ள அவர்களது உறவினர்கள் முறையிட்டு வருவதாகவும் ஆஸ்திரேலியாவிலுள்ள Uighur சமூகத் தலைவர் Nurmuhammad Majid கூறியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ஆவணங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இரகசிய முகாம்களிலுள்ளவர்களை விடுதலை செய்யவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
