தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் வகையில் ஊதியத்திருட்டில் ஈடுபடுகின்ற தொழில் வழங்குனர்களை சிறையில் தள்ளும் வகையிலான புதிய சட்டத்தை அரசு கொண்டுவரவுள்ளதாக பிரதமர் Scott Morrison நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான Master Chef-இல் பங்கேற்ற சமையற்கலை நிபுணர் ஒருவர் தனது உணவகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் 78 லட்சம் டொலர்களை சுரண்டினார் என்ற அதிர்ச்சிதரும் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ள பின்னணியில் வேலைத்தளங்களில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை கிரிமினல் குற்றமாக கருதும் புதிய சட்டம் தற்போது சட்ட மா அதிபரினால் தயாரிக்கப்பட்டுவருகிறது. மிக விரைவில் நாடாளுமன்ற ஒப்புதலுடன் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று பிரதமர் கூறினார்.
அதேநேரம் வேலைத்தள உரிமைகள் விடயத்தில் பலவீனமான தொழிலாளர்களை இலகுவாக ஏமாற்றி அவர்களது உழைப்பைச் சுரண்டிவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற வேலைவழங்குனர்களின் பாரம்பரிய துணிச்சல் முற்றாக ஒழிக்கப்படும்வகையில் அரசு சட்டத்தை கொண்டுவரவுள்ளது என்று தொழில்துறை உறவுகள் தொடர்பான அமைச்சர் Attorney General, Christian Porter தெரிவித்திருக்கிறார்.
