இந்துக்கடவுட்களில் ஒருவராகக் கருதப்படும் விஷ்ணுவின் சிலை பாலித்தீவில் அமைக்கப்பட்டு வரும்நிலையில், இதுவே உலகின் மாபெரும் சிலை என கருதப்படுகிறது.
புராணப்பறவை கருடனுடன் பாலி விமானநிலையத்தைப் பார்த்தவாறு மலை மீது அமைக்கப்பட்டுள்ள இச்சிலை இறுதிவடிவம் பெறத்தயாராகியுள்ளது.
கடந்த 25 வருடங்களாக 100 மில்லியன் செலவில் பல தடங்கல்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுவரும் இச்சிலையின் இறுதிப்பணிகள், அடுத்த செப்டம்பருக்குள் பூர்த்தியாகிவிடும் என இதை அமைத்துவரும் சிற்பி Nyoman Nuarta தெரிவித்துள்ளார்.

சிலை வைக்கப்படும் தூணின் அடிப்பாகத்தையும் சேர்த்தால் இதன் உயரம் 120 மீட்டர் ஆகும். இது அமெரிக்காவின் Statue of Liberty-சுதந்திரதேவி சிலையை விட 30 மீட்டர் உயரமாகும்.
மிகுந்த கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்படும் இச்சிலையானது, அடுத்த 100 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிக்கும்வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இறுதிவடிவம் பெறாவிட்டாலும் பாலித்தீவின் சுற்றுலாத்துறை மேம்பாட்டில், இச்சிலை ஏற்கனவே பாரிய பங்கு வகித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
