பொதுமக்கள் போக்குவரத்து தொடர்பான துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் அதன் அடிப்படையில் மாநிலத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கும் விக்டோரியாவாசிகளின் நடமாட்டங்கள் குறித்த தகவல்களை அவர்களது கைத்தொலைபேசிகளின் வழியாக பெற்றுக்கொள்வதற்கு விக்டோரிய அரசு ஆலோசித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்துபவர்கள் மற்றும் தனியார் போக்குவரத்துக்களை பயன்படுத்துபவர்கள் அதற்கு எடுத்துக்கொள்ளும் பயணநேரம், அவர்கள் பயன்படுத்துகின்ற பாதைகள் போன்ற தகவல்களை அவர்களது கைத்தொலைபேசிகளின் வழியாக பெற்றுக்கொள்வதன் மூலம் மாநிலத்தின் போக்குவரத்து நெருக்கடிகளை தீர்ப்பதற்கு துல்லியமாக திட்டமிட அரசு விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விக்டோரிய அரசின் இந்த யோசனையானது பொதுமக்களின் தனியுரிமைகளுக்குள் அத்துமீறி நுழையும் நடவடிக்கை என்று பரவலான எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன.
மாநிலத்தின் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கு இவ்வாறானதொரு திட்டத்தை அணுகுவது நல்லவிடயம்தான். ஆனால், அது பொதுமக்களது தனியுரிமைகளுக்குள் கை வைப்பதற்காக இருக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
யார் யார் எங்கு உலவுகிறார்கள் என்ற தகவல்களை அறுவடை செய்வதற்கு அரசு முயற்சி செய்வது மிகப்பாரதூரமானது என்று Liberty Victoria president Jessie Taylor கவலை தெரிவித்துள்ளார்.
