கடுமையான பொருளாதாரத்தடைகள் காரணமாக பொருளாதார ரீதியாக பலவீனமடைந்துவரும் ரஷ்யா, பொருளாதார தடைகளில் இருந்து மீள என்னவேண்டுமானாலும் செய்யக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்த பின்னணியில் அமெரிக்க விண்வெளிவீரர் ஒருவரை ISS- International Space Station சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலேயே விட்டுவிட்டு வரப்போவதாக ரஷ்யா அச்சுறுத்துவதாக சொல்லப்படுகிறது.
ISS என்ற சர்வதேசவிண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருக்கும் அமெரிக்க விண்வெளி வீரரான Mark Vande Hei பூமிக்கு திரும்பிவர, ரஷ்யா தனது Soyuz கலத்தில் இடம் தராது- அவரை அங்கேயே விட்டுவிட்டு மற்றைய இரண்டு ரஷ்ய வீரர்களும் திரும்பிவிடுவார்கள் என்று வெளிவரும் செய்திகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதன் பின்னணி சற்று சுவாரசியமானதுதான்.

International Space Station சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 1998 ஆம் ஆண்டு விண்வெளியில் நிறுவப்பட்டது. ரஷ்யா அனுப்பிய Control Module Zarya, அமெரிக்கா அனுப்பிய Unity என்ற Module உடன் அமெரிக்க விண்வெளி வீரர்களால் இணைக்கப்பட்டு இந்த ஆராய்ச்சி நிலையம் அப்போது உருவானது.
இது தனி ஒரு நபருக்கோ தனி ஒரு நாட்டுக்கோ சொந்தமானதல்ல. இது ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையேயான ஒரு co-operative programme -கூட்டுறவுச் செயல்பாடாகும். இந்த அமைப்பில் அமெரிக்காவின் NASA, ரஷ்யாவின் Roscosmos, ஜப்பானின் JAXA , ஐரோப்பாவின் ESA, கனடாவின் CSA ஆகிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன. இந்த நிலையத்தைப் பயன்படுத்தும் உரிமையும் இந்த ஐந்து நாடுகளுக்கு மட்டுமே உண்டு. ஆனால் கடந்த 23 வருடங்களாக 19 நாடுகளைச்சேர்ந்த 244 விண்வெளி வீரர்கள் இந்த நிலையத்திற்கு போய் வந்திருக்கிறார்கள்.
அமெரிக்க விண்வெளிவீரரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான Mark Vande Hei கடந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் International Space Station சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றார். அவரது பணிக்காலம் மேலும் 6 மாதங்களால் நீட்டிக்கப்பட்டது. இதன் படி மிகநீண்டகாலம் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (340 நாட்கள்) பணியாற்றிய முதலாவது அமெரிக்க விண்வெளி வீரர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

Mark Vande Hei இம்மாத இறுதியில் பூமிக்குத் திரும்பி வரவேண்டும். ஆனால் உக்ரைன் மண்ணில் நடக்கும் போர் காரணமாக ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் வேறு பல ஐரோப்பிய நாடுகளுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் geopolitical tensions என்ற ‘புவிசார் அரசியல் பதற்ற நிலை’ காரணமாக Mark Vande Hei பூமிக்கு திரும்பிவர ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி ரஷ்யா தனது Soyuz விண்கலத்தில் இடம் கொடுக்குமா என்ற கேள்வி இப்போது பூதாகரமாக எழுந்துள்ளது.
அவரை பூமிக்கு அழைத்துவர ஏன் ரஷ்ய விண்கலம் ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இதில் உள்ள சிக்கல்.
ஏனெனில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்ய விண்கலங்கள் மட்டுமே ISS International Space Station இற்கு போக்குவரத்து வசதிகளைச் செய்துகொடுத்துவருகின்றன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அமெரிக்க வீரர்கள் பல மில்லியன் டாலர்கள் செலவில், ரஷ்ய கலங்களில் போய்வந்துகொண்டிருக்கிறார்கள். வழமையாக விண்வெளி வீரர்களை ஏற்றிவரும் ரஷ்ய Soyuz விண்கலம் Kazakhstan இல் தரையிறங்கும் . அதன்பின்பு Gulfstrem jet விமானத்தில் அமெரிக்க வீரர்கள் அமெரிக்கா வந்து சேர்வார்கள். இந்த அடிப்படையில் Vande Hei யும் வந்து சேருவார் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும்.
ஆனால் ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான Roscosmos இன் தலைவர் Dimitry Rogozin, அமெரிக்காவுக்கு எதிரான பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார். அமெரிக்க விண்வெளிவீரர் Vande Hei ஐ விட்டுவிட்டு மற்றைய ரஷ்ய வீரர்கள் ISS இலிருந்து வெளியேறுவது போன்ற வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இது உண்மையான வீடியோ காட்சியல்ல என்றும் animation முறையில் தயாரிக்கப்பட்டது என்றும் இப்போது சொல்லப்படுகிறது. ஆனால் இந்த காணொளிக் காட்சிகள் தமக்கு மிகுந்த மன வேதனையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக Mark Vande Heiயின் தாய் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள்.
Dimitry Rogozin இது மாதிரியான செய்திகளை அமெரிக்காவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருபவர் என்று சொல்லப்படுகிறது.

இந்த சிக்கல் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல. ரஷ்யாவைத் தவிர அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்த 7 விண்வெளிவீரர்கள் தற்போது விண்ணில் நிலைகொண்டுள்ள International Space Station சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கிறார்கள். இவர்களுள் Mark Vand Hei யும் இரண்டு ரஷ்ய வீரர்களும் மாத்திரமே இம்மாத இறுதியில் அங்கிருந்து திரும்பவேண்டியவர்களாவர். அந்த மூவரில் அமெரிக்கரான Mark Vand Hei ஐ மட்டும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் விட்டுவிட்டு மற்ற இரு ரஷ்ய வீரர்களும் திரும்பிவிடுவர் என்பதுதான் ரஷ்யாவின் அதிகாரபூர்வமற்ற மறைமுக எச்சரிக்கை.
ஆனால் ரஷ்யா அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையேயான கூட்டு விண்வெளி ஆராய்ச்சி வழமைபோல தொடரும் என்பதே NASA வின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால் அமெரிக்க வீரர் Mark Vande Hei, ரஷ்யாவின் உதவியின்றி பூமிக்குத்திரும்ப முடியுமா என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர்.
அதில்தான் ஒரு திருப்பம். Elon Musk இன் Space X இப்போது விண்வெளிவீரர்களையும் தனிப்பட்டோரையும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்துச்செல்லத்தொடங்கியுள்ளது. Elon Musk இன் Space X 2020 இல் தனது Crew Dragon என்ற கலத்தில் விண்வெளி வீர்ர்களை அழைத்துச்சென்றது முதல், மீண்டும் அமெரிக்க கலம் ISS இற்கு போய்வர ஆரம்பித்திருக்கிறது. ரஷ்ய விண்வெளி வீரர்கள்கூட Space X இல் போய்வருவதற்கும் இருநாடுகளும் உடன்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் Space X மூலமாக Mark Vande Hei பூமிக்குத் திரும்பக்கூடும்.

Space X அடுத்த மாத நடுப்பகுதியில் நான்கு விண்வெளி வீரர்களை அழைத்துக்கொண்டு அங்கு செல்லவிருக்கிறது. திரும்பும்போது நான்கு பேரை அங்கிருந்து அழைத்துவரவுள்ளது. இதன்போது இது சாத்தியமாகலாம். ஆனால் இதுகுறித்து NASA இன்னும் ஏதும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவின் Mark Vande Hei எப்படி பூமிக்குத் திரும்பப் போகிறார் என்ற கேள்வியோடு இன்னொரு கேள்வியும் எழுகிறது. தொடர்ந்துவரும் ரஷ்யாவுக்கெதிரான பொருளாதாரத்தடைகள் காரணமாக ரஷ்யா இந்த ISS எனப்படும் International Space Station சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலைய திட்டத்திலிருந்து முழுமையாக வெளியேறப்போவதாகவும் தமது module பகுதியை கழற்றிவிடப்போவதாகவும் இதனால் அமெரிக்கா தனித்து விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை நடத்தமுடியாது என்றும் கழற்றிவிடப்படும் 500 டன் எடையுள்ள ரஷ்ய பகுதி பூமியில் ரஷ்யா தவிர்ந்த எந்த இடத்தில் வேண்டுமானாலும் விழக்கூடும் என்றெல்லாம் ரஷ்ய விண்வெளி ஆராய்சி நிறுவனத்தின் தொலைக்காட்சிப் பிரிவு கூறிவருகிறது.
இதில் உண்மையில்லை என்றும் அமெரிக்காவை நெருக்கடிக்குள்ளாக்கவே ரஷ்யா இந்த விஷமப் பிரச்சாரத்தை செய்துவருவதாக அவதானிகள் தெரிவிக்கிறார்கள்.
கூடவே, ரஷ்யாவின் ஒத்துழைப்பில்லாமல் ISS (International Space Station சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம்) விண்வெளியில் இயக்குவதற்கு ஒரு தீர்வைத் தாம் தேடி வருவதாக NASA கூறியிருக்கிறது. NASA வும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் ISS ஐ 2030 வரை இயக்க உத்தேசித்திருக்கின்றன. ஆனால் பொருளாதார காரணங்களுக்காக தமது பங்களிப்பை ரஷ்யா 2024 வரை மட்டுமே உறுதி செய்திருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் 2024 இன் பின்னர் ரஷ்யா தனது பங்களிப்பைத் தொடருமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
