சுமார் ஏழரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் கடந்த ஐந்து வருடங்களாக எந்த வேலையும் செய்யாமல் அரச உதவிப்பணத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்று ஆஸ்திரேலிய தகவல் திணைக்கள தரவுகளில் தெரியவந்துள்ளது.
Department of Social Services விடுத்துள்ள தகவல் குறிப்பில் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் -கடந்த ஐந்து வருடங்களாக சுமார் 765,424 பேர் இவ்வாறு அரசு உதவிகளை பெற்றுவருகிறார்கள் என்றும் நாடளாவிய ரீயில் மேற்கொள்ளப்பட்ட தகவல் ஆய்வின்படி சிட்னியில்தான் அதிகம்பேர் இவ்வாறு அரச கொடுப்பனவுகளை பெற்றுவருகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2015-16 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறு உதவிப்பணம் பெறுபவர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்த நிதி 157 கோடி டொலர்கள் என்றும் இனிவரும் காலங்களில் இவ்வாறு உதவிப்பணம் பெறுபவர்களின் நடவடிக்கைகள் குறித்து அரசு இறுக்கமான நடைமுறைகளை கொண்டுவரப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆளும் Turnbull அரசு கொண்டுவரவுள்ள புதிய ஏற்பாட்டின்படி, எதிர்வரும் அக்டோபர் மாத்திற்கு பிறகு அரச உதவிகளை பெற்றுவருபவர்களுக்கு விசேட அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. உதவிப்பணம் பெறுபவரின் புகைப்படம் உட்பட சகல விவரங்களையும் உள்ளடக்கிய இந்த அடையாள அட்டையின் ஊடாக இந்த உதவிப்பணத்தை முறைகேடான வழியில் பெற்றுவருபவர்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
