விக்டோரியாவின் அரச பாடசாலைகள் அனைத்திலும் அடுத்த வருடம் முதல் மாணவர்கள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை கொண்டுவரப்படவுள்ளது.
அடுத்த வரும் முதல் தவணையில் பாடசாலைகள் ஆரம்பிக்கும்போது இந்த தடை நடைமுறைப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் James Merlino தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் மாணவர்கள் கைத்தொலைபேசியை பயன்படுத்துவதால் கல்வியில் அவர்கள் போதியளவு கவனம் செலுத்தமுடியாதுள்ளது என்பதுடன் கைத்தொலைபேசிகளின் ஊடாக ஏனைய மாணவர்களின் மீது துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவதும் அவதானிக்கப்பட்டிருக்கிறது என்று இந்த தடை அறிவிப்பு குறித்து கூறும்போது கல்வி அமைச்சர் மேலும் விவரித்துள்ளார்.
மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது தங்களது கைத்தொலைபேசியை அணைத்து அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் (personal lockers) வைத்துவிட்டு வகுப்புக்களுக்கு வரவேண்டும் என்றும் அவர்களுடன் தொடர்புகொள்ள விரும்பும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பாடசாலை தொலைபேசிக்கு அழைத்து பேசமுடியும் என்றும் James Merlino கூறியுள்ளார்.
வகுப்பு நேரங்களிலும் கைத்தொலைபேசியை வைத்திருக்கவேண்டிய விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கு இந்தக்கட்டுப்பாட்டில் விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் இதற்கான தகுந்த காரணங்கள் பாடசாலை நிர்வாகத்தினால் பரிசீலிக்கப்பட்டு அந்த அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share
