விக்டோரிய மாநிலத்தில் அதிகளவிலான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆஸ்திரேலியர்களும் நியூசிஸிலாந்து நாட்டவர்களுமே அன்றி ஏனைய நாட்டைச்சேர்ந்தவர்களோ அல்லது வேறு நாடுகளின் பின்னணியை உடையவர்கள் அல்ல என்று Crime Statistics Agency குற்றத்தரவு ஏஜென்சியிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
விக்டோரியாவில் சூடான் நாட்டவர்கள்தான் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் இவர்களின் தொடர்ச்சியான ஆபத்தினால் மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாதநிலை தோன்றியுள்ளதாகவும் Malcolm Turnbull தலைமையிலான அரசாங்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சில ஊடகங்களும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தியிருந்தன.
ஆனால், இந்தக்கருத்தினை முற்றாக மறுத்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான Nyadol Nyuon தேசிய குற்றவியல் தரவுகள் திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொண்ட விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விபரங்களின் படி - விக்டோரிய மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 12 மாதங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களை எடுத்து நோக்கினால் அவற்றில் 73.5 சதவீதமாவற்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆஸ்திரேலியர்களும் நியூசிலாந்து நாட்டவர்களுமே ஆவர். இவற்றில் 68 சதவீதமானவை ஆஸ்திரேலியர்கள் சம்பந்தப்பட்டவை. சூடான் மற்றும் தென் சூடான் நாட்டவர்களால் இழைக்கப்பட்ட குற்றங்கள் வெறும் 1.1 வீதமானவை மட்டுமே. அதேபோல, இந்தியர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் 1.4 வீதமானவை என்றும் லண்டன் மற்றும் அயர்லாந்து நாட்டவர்கள் தொடர்புபட்ட குற்றங்கள் 1.3 சதவீதமானவை என்றும் வியட்நாமியர்கள் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் 1.1 வீதமானவை என்றும் பதிவாகியுள்ளது.
சில குறிப்பிட்ட சம்பவங்களில் வெளிநாட்டவர்களின் ஈடுபாடு குறித்து ஊடகங்கள் பூதாகரப்படுத்தினாலும் தரவு ரீதியில் காணப்படும் உண்மை முற்றிலும் வேறானதே என்று Nyadol Nyuon தெரிவித்துள்ளார்.
