Commonwealth வங்கியிலிருந்து சட்டவிரோதமாக வாடிக்கையாளர்களின் தகவல்களை பெற்று கடன் மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு விக்டோரிய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரபல சூதாட்ட புள்ளி ஒருவருக்கு 12 வருட சிறையும், பிரபல கணக்கியல் நிறுவனத்தை சேர்ந்த மற்றைய நபருக்கு 10 வருட சிறையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுமார் ஏழரைக்கோடி டொலர்களுக்கும் மேற்பட்ட பணத்தை Commonwealth வங்கியிலிருந்து மோசடி செய்த இந்த வழக்கானது விக்டோரிய நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்த வங்கி மோசடி வழக்குகளிலேயே மோசமான ஒன்று என தனது தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார்.
மேற்படி செய்தியை தனது பிரத்தியேக புலனாய்வு செய்தியாக இன்று வெளியிட்டுள்ள FairFox ஊடகம், இது விடயம் சம்பந்தமாக குறிப்பிடுகையில் - 2004 ஆம் ஆண்டுக்கும் 2011 ஆம் ஆண்டுக்கும் இடையில் இந்த வங்கி மோசடி இடம்பெற்றிருக்கிறது. வங்கியின் உத்தியோகத்தர்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் சிலரது வங்கி விவரங்களை பெற்று அவர்களது பெயர்களில் பெருந்தொகையான கடன் மோசடி இடம்பெற்றிருக்கிறது. இது தொடர்பாக சில வாடிக்கையாளர்கள் உடனடியாகவே கண்டுபிடித்து Commonwealth வங்கியிடம் முறையிட்டிருக்கிறார்கள். ஆனாலும் வங்கி இதுவிடயத்தில் துரித நடவடிக்கையை எடுக்கவில்லை. தனது உத்தியோகத்தர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டத்தை கடந்த ஏழுவருடங்களாக தொடர்ந்து மறைத்தும் மறுத்தும் வந்திருந்தது. பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தொடர்ந்தும் நீதிக்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக தற்போது குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை கிடைத்திருக்கிறது-என அச்செய்தியில் தெரிவித்துள்ளது.
இந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து Commonwealth வங்கி தனது உத்தியோகபூர்வ ஊடக குறிப்பில் - தமது வங்கியின் ஊடாக சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களுக்கு சட்டத்தின் முன் தண்டனை கிடைத்திருப்பது குறித்து தமது நிறுவனம் திருப்தியடைவதாகவும், இது விடயத்தில் தமது நிறுவன உத்தியோதர்கள் எவரும் ஈடுபட்டமைக்கு ஆதாரம் இல்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு தமது நிறுவனம் தொடர்ந்தும் உயர்ந்த சேவையை வழங்கும் என்றும் கூறியிருக்கிறது.
