வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசிகளை பயன்படுத்தும் ஓட்டுனர்களை பிடிப்பதற்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முதற்கட்டமாக 45 இடங்களில் கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக அம்மாநில அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
சுமார் எட்டு கோடி 80 லட்சம் டொலர் செலவில் இந்த உயர்தர கமராக்கள் மாநிலமெங்கும் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது NSW மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசியை பயன்படுத்தும் ஓட்டுனர்கள் 344 டொலர்கள் அபராதமும் 5 புள்ளிகளும் தண்டனையாக பெறுவர். ஆக, தற்போது புதிதாக கொண்டுவரப்படவுள்ள கமராக்கள் அரசு வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படுபவை அல்ல. மாறாக, வாகன ஓட்டுனர்களின் குற்றக்கலாச்சாரம் மாற்றப்படவேண்டும் என்று NSW மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தப்புதிய கமாராக்களை சோதனை செய்வதற்காக கடந்த ஆறுமாதங்களாக மாநிலத்தில் இரண்டு இடங்களில் மாத்திரம் பரீட்சார்த்தமாக பொருத்தி செயற்படுத்தியபோது, அந்த கமராக்கள் படமெடுத்த 850 லட்சம் வாகனங்களில் ஒரு லட்சம் ஓட்டுனர்கள் கைத்தொலைபேசியை பயன்படுத்தியபடி வாகனமோட்டியமை அவதானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் மாநிலத்தில் 45 இடங்களில் இந்த சிறப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு வாகன ஓட்டுனர்கள் கைத்தொலைபேசி பாவனையை படம்பிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.
மூன்று மாத காலத்துக்கு வாகன ஓட்டுனர்கள் இந்த கமராக்களின் ஆபத்தை உணர்ந்து தங்களது சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையை கைவிடுவதற்கு அவகாசம் வழங்கப்படும். அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் மேற்படி கமராக்களில் துல்லியமாக படம்பிடிக்கப்படுகின்ற சட்ட விரோத வாகன ஓட்டுனர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று NSW மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
