ஆஸ்திரேலியர்கள் கடந்த 12 மாதங்களில் மேற்கொண்ட வெளிநாட்டுப்பயணங்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது நினைத்துப்பார்க்க முடியாதளவு அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் Smartraveller புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் ஆஸ்திரேலியர்கள் ஒரு கோடியே 7 லட்சம் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுமார் ஆயிரம் பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்பவர்களில் பத்து வீதத்துக்கு குறைவானவர்கள் இன்னமும் பயணக்காப்புறுதிகளை எடுத்துக்கொள்ளாமலேயே போய் வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 30 வயதுக்கு குறைவானவர்களே இவ்வாறு பெருமளவில் பயணக்காப்புறுதிகளைப் பெற்றுக்கொள்ளாமல் பயணிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தாங்கள் பயணிக்குமிடங்கள் பிரச்சினைக்குரியவை அல்ல என்ற சொந்த முடிவின் பிரகாரம் காப்பறுதிகளை பெற்றுக்கொள்ளாமல் பயணிக்கிறார்கள் என்றும் அந்த நாடுகளுக்கு சென்று பரசூட்டிலிருந்து குதிப்பது, வேகமான மோட்டார் சைக்கிள் சவாரிகளில் போவது என்பவை உட்பட சகல விதமான வீரதீர விளையாட்டுக்களிலும் பங்கெடுக்கிறார்கள் என்றும் இந்த தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.எனவே இப்படியான செயல்களில் ஈடுபடுவதற்கு முன்னர் தமக்கான காப்புறுதி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் வெளிநாடுசெல்லும் ஆஸ்திரேலியர்கள் அனைவரும் தமது பயணத்திற்கு முன்னர் Smartraveller இணையத்துக்குச் சென்று பார்வையிடுவது முக்கியம் என வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
