ஆஸ்திரேலியாவின் விக்டோரிய மாநிலத்தில் வசிப்பதற்கு வருகின்றவர்கள் ஆறு மாதங்களுக்குள் தங்களது வெளிநாட்டு வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தை ஆஸ்திரேலிய(விக்டோரிய மாநில) வாகன ஒட்டுனர் அனுமதி பத்திரமாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற புதிய அறிவிப்பு இந்த வாரம் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விக்டோரிய வீதிப்பாதுகாப்பு விதிகளின் கீழ் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரையில், வெளிநாட்டு வாகன அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் எந்த விசாவுடன் விக்டோரியாவில் வசித்தாலும் நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக்கொள்ளும்வரைக்கும் அவர்கள் வெளிநாட்டு வாகன ஓட்டுனர் அனுமதி பத்திரத்தையே பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால், புதிய நடைமுறையின் கீழ், விக்டோரியாவில் வசிப்பதற்கு வருகின்ற மாணவர் விசா உட்பட தற்காலிக விசா உடையவர்கள், ஆறு மாத காலத்துக்குள் தங்களது வெளிநாட்டு வாகன ஓட்டுனர் அனுமதி பத்திரத்தை விக்டோரிய ஆவணமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
தற்காலிக விசாவுடன் இன்னமும் வெளிநாட்டு வாகன அனுமதி பத்திரத்தை பயன்படுத்திவருபவர்கள், ஒக்டோபர் 29 ஆம் திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் தங்களது வாகன ஓட்டுனர் அனுமதி பத்திரத்தை விக்டோரிய வாகன ஒட்டுனர் அனுமதி பத்திரமாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
