ஆஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் வந்து விமானநிலையங்களில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் தங்களிடம் இல்லை என்று உள்துறை அமைச்சு கை விரித்துள்ளது.
இந்த தகவலை பெற்றுக்கொள்வதற்காக சுயாதீன தகவல் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின்போதே உள்துறை அமைச்சு இந்த செய்தியை கூறியுள்ளது.
கடந்த 2017 - 2018 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு 4 கோடி 30 லட்சம் பேர் விமானங்களில் வந்து இறங்கியுள்ளனர். இந்த காலப்பகுதியில் நாலாயிரத்து 584 பேருக்கு immigration clearance- குடிவரவுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் புகலிடக்கோரிக்கையாளர்களா என்பதும் இவர்களில் எத்தனைபேர் அகதி தஞ்சம் கோரியிருக்கிறார்கள் என்ற விபரங்களும் உள்துறை அமைச்சிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, 2019 ஆம் ஆண்டின் முதல் அரைவாசிக்காலப்பகுதியில், ஆஸ்திரேலியாவிலிருந்து புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை 19 வீதத்தினால் குறைந்துள்ளது என்று உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
வழக்கமாக விமானநிலையத்தில் வந்து புகலிடம் கோருபவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர் நாட்டுக்கு வந்து இறங்கிய விசாவுடனேயே உள்ளே அனுமதிக்கப்படுவார். அதன் பின்னர், அவர் தற்காலிக விசாவுக்கு விண்ணப்பித்து தனது புகலிடக்கோரிக்கை தொடர்பான பதில் கிடைக்கும்வரை சட்டபூர்வமாக வேலை செய்துகொள்வதற்கான உரிமையுடன் நாட்டில் தங்கலாம் என்பது குறப்பிடத்தக்கது.
