இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவிற்குமிடையிலான வர்த்தக உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகையில், இந்திய மாம்பழங்களும் ஆஸ்திரேலிய சந்தையைக் காணும் சந்தர்ப்பத்தைப் பெறுகின்றன. ஆனால், ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்னர் கதிரியக்க சிகிச்சையளிக்கப்பட்ட பின்னரே பழங்கள் ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்படலாம்.
வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா முதல் தடவையாக மாம்பழங்களை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது என்று சொல்வதற்கில்லை. மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சில காலமாகவே, ஆனால் சிறிய தொகையில் மாம்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்திருக்கிறது.
ஆஸ்திரேலிய தட்ப வெட்ப சூழலுக்கமைய மாம்பழங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தான் இங்கே விளைகின்றன. அந்தக் கால இடைவெளிக்கு அப்பாலுள்ள மாதங்களில் மட்டுமே இந்திய மாம்பழங்கள் இறக்குமதி செய்யப் படும் என மாம்பழ தொழிற்சங்கத்தின் Robert Grey கூறினார்.
"உலகளாவிய வர்த்தகத்தின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு உலகெங்கிலும் உள்ள மற்ற நாட்டு சந்தைகளை நாங்கள் அணுக வேண்டும் என்றால், பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாப்பான மற்ற நாட்டு மாம்பழங்கள் ஆஸ்திரேலியாவில் விற்கப்படுவதை நாம் அனுமதிக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
ஒரு வருடத்தில் 200 முதல் 300 டன் மாம்பழங்களை இந்தியா தற்போது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. அதே அளவு தொகையை ஆஸ்திரேலியாவிற்கும் ஏற்றுமதி செய்யும் என நாம் எதிர்பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு மாம்பழங்களை அனுப்புவதற்கு Kay Bee Exports என்ற இந்திய கம்பெனி தற்போது தயாராகி வருகிறது என அதன் தலைமை நிர்வாகி Kaushal Khakhar தெரிவித்தார்.

இந்திய மாம்பழங்கள் மார்ச் மாத இறுதி முதல் ஜூலை மாதம் வரை உற்பத்தியாகின்றன. ஆஸ்திரேலியர்கள் வருடம் பூராகவும் மாம்பழத்தை உருசிக்கும் வழி விரைவில் பிறக்கும் என எதிர்பார்க்கலாம்.
