விக்டோரிய மாநிலத்தில் வாழும் குடும்பங்கள் தமது வீடுகளில் solar panel எனப்படும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தகடுகளைப் பொருத்துவதற்கு 50 வீத அரச மானியம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் இத்திட்டத்தின்படி அடுத்த பத்து ஆண்டுகளில் விக்டோரியா மாநிலத்திலுள்ள ஆறரை லட்சம் வீடுகளில் சோலார் தகடுகள் பொருத்துவதற்கான உதவிகள் வழங்கப்படவுள்ளன.
3 மில்லியன் டொலர்களுக்கும் குறைவான பெறுமதியுள்ள தனது சொந்த வீட்டில் வாழ்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் அவர்களது மொத்த வருமானம் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்தி 80 ஆயிரம் டொலர்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
கடந்த ஆகஸ்ட் 19ம் திகதி முதல் தமது வீடுகளில் சோலார் தகடுகளைப் பொருத்திய குடும்பங்கள், 2225 டொலர்கள் வரை அரச மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியுமென விக்டோரியா மாநில எரிசக்தி மற்றும் சுற்றுச்சுழல் விவகாரங்களுக்கான அமைச்சர் Lily D’Ambrosio அறிவித்துள்ளார்.
தமது வீடுகளில் சோலார் தகடுகளைப் பொருத்தும் குடும்பங்கள் ஆண்டொன்றுக்கு சுமார் 890 டொலர்கள் வரை மின்கட்டணத்தில் சேமிக்க முடியுமென விக்டோரிய Premier Daniel Andrews தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜுன் 30ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்திற்கென 1.24 பில்லியன் டொலர்களை விக்டோரிய மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
இதேவேளை தமது வீடுகளில் solar hot water system பொருத்துபவர்களுக்கு 1000 டொலர்கள் அரச மானியம் வழங்கும் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுகிறது.
