ஆஸ்திரேலியாவில் சமீபகாலத்தில் வீட்டுக்கடன் பெற்றவர்களில், கால்வாசிக்கும் மேற்பட்டோர் தமது விண்ணப்பங்களில் பொய் சொல்லியிருப்பதாக, ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.
UBS முதலீட்டு வங்கியால் நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள், தமது விண்ணப்பங்களில் எவ்வித பொய்களும் இடம்பெற்றிருக்கவில்லை என்று கூறினாலும், 28 வீதமானவர்கள் தாம் பொய்யான தகவல்களை குறிப்பிட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வருமானம், சொத்து விபரம் போன்றவற்றை அதிகமாக கூறுதல், ஏற்கனவே உள்ள கடன்தொகை மற்றும் வாழ்க்கைச் செலவை குறைவாகப் பதிவு செய்தல் போன்ற பொய்யான தரவுகளை தாம் வழங்கியிருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இப்படியாக பொய்யான விபரங்களை வழங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையே தமது ஆய்வு முடிவு காட்டுவதாக குறிப்பிட்டுள்ள UBS, இந்தவிடயம் தொடர்பில் வங்கிகள் இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் அதேநேரம் அனைத்து விண்ணப்பங்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை வீட்டுக்கடன் விண்ணப்பங்களில் பொய் சொன்னால் கடன் நிராகரிக்கப்படுவதுடன் வேறு பல நீண்டகால பாதிப்புக்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதால் இதனைத் தவிர்த்துக்கொள்ளுமாறு UBS அறிவுறுத்தியுள்ளது.
