தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து வருடங்களால் நீடிப்பதாக இந்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான அரசமைப்பின் 1967 ஆம் ஆண்டு ஏற்பாட்டின் கீழ் இந்த தடைநீடிப்பை அறிவிப்பதாக இந்தியாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
'தமிழீழ விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியான வன்முறை மற்றும் குழப்ப நடவடிக்கைகள் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் பங்கம் விளைவிப்பவையாக அமைந்திருக்கின்றன. அந்த அமைப்பு தொடர்ந்தும் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை பிரதிபலிப்பதுடன் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுகிறது' - என்று உள்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 'தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டமைக்கு இந்தியாவே பொறுப்பு என்ற பிரச்சாரம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் அறிக்கைகள் - கட்டுரைகள் வழியாக தொடர்ந்தும் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில், இந்த பிரச்சாரமானது இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திவருகிறது. இது இந்தியாவின் மிக முக்கியமான நபர்களினது பாதுகாப்பில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன' என்று பாதுகாப்பு அமைச்சு நம்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
