போதியளவு சம்பள உயர்வில்லாது வாழ்க்கை செலவீனங்களோடு போராடுகின்றவர்களாக ஆஸ்திரேலியர்கள் காணப்படுவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்திருக்கிறது.
தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் ஆதரவில் சுமார் 2500 பேரிடம் ReachTEL அமைப்பு மேற்கொண்ட மாதிரி கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.
கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டவர்களின் 48 சதவீதமானவர்கள் தமக்கு கடந்த 12 மாத காலப்பகுதியில் எந்தவிதமான சம்பள உயர்வும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.
33 சதவீதமானவர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தபோதும் அது எந்த வகையிலும் அதிகரித்துவரும் வாழ்க்கைச்செலவீனத்தை ஈடுசெய்யுமளவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
19 சதவீதமானவர்கள்தான் தமக்கு கிடைக்கப்பெற்ற சம்பள உயர்வின் மூலம் வாழ்க்கை செலவீனங்களை சமாளிக்கக்கூடியதாக உள்ளது என்று திருப்தி வெளியிட்டுள்ளார்கள்.
மந்த கதியில் நகரும் சம்பள உயர்வு மற்றும் வாழ்க்கை செலவீனப்பிரச்சினை ஆகியவைதான் இம்முறை தேர்தலில் பிரதான பேசுபொருட்களாக இருக்கப்போகின்ற என்று கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய 80 வீதமானவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்குமான சமநிலை தலைகீழாக உள்ளதாகவும் பெரு வணிக முதலாளிகளின் பிடியில் கூடிய அதிகாரங்கள் காணப்படுவதால் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் என்றைக்குமே உரிய நடவடிக்கை எடுக்கமுடியாதுள்ளது என்றும் ACTU secretary Sally McManus கூறியுள்ளார்.
