ஆஸ்திரேலிய அரசின் அதிகாரபூர்வ வட்டி விகிதம் 0.75 என்று Reserve Bank of Australia இன்று அறிவித்தது. தற்போது 1.00 சதம் என்று இருந்த வட்டிவிகிதம் 0.25 சதம் குறைக்கப்பட்டு இனி வட்டி விகிதம் 0.75 என்று இருக்கும் என்று அரசின் Reserve Bank of Australia அறிவித்தது. இந்த வட்டி குறைப்பு வரலாறுகாணாத குறைப்பு என்று பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மூன்றாவது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் ஒரு முறையும், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதவாக்கில் இன்னொரு முறையும் வட்டி விகிதத்தை Reserve Bank of Australia குறைக்கும் என்று பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு வட்டி விகிதம் .25 என்று இருக்கும் என்று அவர்கள் எதிர்வு கூறுகின்றனர்.
உலகின் பொருளாதார மந்த நிலை, ஆஸ்திரேலிய பொருளதார வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் தேக்கம், நாட்டில் உயர்ந்துவரும் வேலையில்லா திண்டாட்டம், நிறுவனங்களில் ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்காமல் இருக்கும் நிலைமை என்று பல காரணங்களால் இந்த வட்டி குறைப்பு அவசியமாவதாக Reserve Bank of Australia வின் ஆளுநர் Philip Lowe இந்த வட்டி குறைப்பை நியாயப்படுத்தினார்.
Reserve Bank of Australia அறிவித்திருக்கும் புதிய வட்டி விகிதத்தை நாட்டின் முன்னணி வங்கிகள் வீட்டுக் கடன் வைத்திருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த வட்டி குறைப்பை முழுமையாக வழங்குமா என்று தெரியவில்லை. ஆனால் வீட்டுக் கடன் வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள் புதிய வட்டி குறைப்பின்படி புதிய வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை அறிவித்துள்ளன.
இதற்கிடையில் நாட்டின் பெரும் நகரங்களான சிட்னி, மெல்பன் நகரங்களில் வீட்டு விலை ஏறத் துவங்கியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக விலை சரிவை சந்தித்துக்கொண்டிருந்த வீடுகளின் விலைகள் மீண்டும் ஏறத்துவங்கியுள்ளன. குறிப்பாக கடந்த மாதம் சிட்னி, மெல்பன் நகரங்களில் எனும் இரு நகரங்களிலும் வீடுகளின் விலை 1.7 சதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் பிற நகரங்களில் வீடுகளின் விலை தொடர்ந்து விலை சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் தற்போதைய அரசின் வட்டி விகித குறைப்பு வீடுகளின் விலையை பிற நகரங்களில் அதிகரிக்க செய்யும் என்றும் சிட்னி, மெல்பன் நகரங்களில் இந்த விலை உயர்வு பலரும் வீடு வாங்க முடியாத நிலையை உருவாக்கும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
