ஆஸ்திரேலியாவிலுள்ள முதியோர் இல்லங்களில் கடந்த 2017-18 ஆம் ஆண்டு மாத்திரம் சுமார் மூவாயிரத்து 700 தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதாவது, நாடெங்கிலும் நாளொன்றுக்கு சராசரியாக பத்து வயோதிபர்கள் மேற்படி இல்லங்களில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்று முதியோர் இல்லங்கள் தொடர்பாக தற்போது நடைபெற்று வருகின்ற royal commission விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
நாடெங்கிலுமுள்ள முதியோர் இல்லங்களின் தரம் குறித்த royal commission அமர்வு அடிலெய்டியில் நடைபெற்றுவருகிறது.
இந்த தாக்குதல் சம்பவங்கள் குறிப்பிட்ட இல்லங்களிலுள்ள முதியவர்கள் தங்களுக்குள் தாக்குதலில் ஈடுபட்ட நிகழ்வுகள் அல்ல என்றும் அவ்வாறு இல்லங்களிலுள்ள முதியவர்களுக்கிடையிலான தாக்குதல் சம்பவங்களை உத்தியோகபூர்வமாக பதிவு செய்வதற்கான நிர்வாகக்கடப்பாடுகள் எதுவும் நடைமுறையில் இல்லை என்றும் - இங்கு குறிப்பிபடப்பட்டுள்ள நாளொன்று சராசரியாக பத்து முதியவர்கள் தாக்குதலுக்குள்ளாகிறார்கள் என்பது அவர்கள் அங்கு பணிபுரிபவர்களால் துன்புறுத்தலுக்கு உள்ளாவது தொடர்பான தரவுகளே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் இதில் அடங்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
