இசையமைப்பாளர் இளையராஜா, வரலாற்று ஆய்வாளர் டாக்டர் ராமச்சந்திர நாகசாமி, உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை வழங்கினார்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம், குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என கடந்த ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இசையமைப்பாளர் இளையராஜா உட்பட 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் ராமச்சந்திர நாகசாமி உட்பட 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழக நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன.
இந்த விருதுகள் 2 பிரிவாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மார்ச் 20-ம் தேதி 43 பேருக்கும், ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறும் விழாவில் மீதமுள்ளவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று நடந்த விழாவில் பத்ம விபூஷண் விருது, இசையமைப்பாளர் இளையராஜா உட்பட 3 பேருக்கும் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் ராமச்சந்திர நாகசாமி உட்பட 4 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும் வழங்கப்பட்டன.
பிளாஸ்டிக் சாலை அமைத்து முன்னோடியாக திகழும் தமிழகத்தின் ராஜகோபாலன் வாசுதேவன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர் நானம்மாள் சக்கர நாற்காலியில் வந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டனர். 80 ஆண்டுகளுக்கும் மேலாக நாள் தவறாது யோகா பயிற்சி செய்வதுடன், 600-க்கும் மேற்பட்ட யோகா பயிற்சியாளர்களை உருவாக்கியவர் 98 வயது நானம்மாள் என்பது குறிப்பிடத் தக்கது.
நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர் எல். கே. அத்வானி, மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
