மெல்பேர்னில் Powerball அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் சுமார் 55 மில்லியன் டொலர்களை வென்ற நபர் இன்னமும் தம்மைத் தொடர்புகொள்ளவில்லை என Tatts நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 11ம் திகதி நடைபெற்ற சீட்டிழுப்பில் 32, 7, 5, 34, 38 &11 மற்றும் powerball-க்கான 12 ஆகிய இலக்கங்களைக்கொண்ட அதிஷ்டலாபச்சீட்டு 55 மில்லியன் டொலர்களை வென்றது.
மெல்பேர்னின் Brunswick பகுதியிலுள்ள Scole Lotto and News என்ற கடையில் இந்த அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சீட்டிழுப்பு இடம்பெற்று ஒரு வாரமாகியும் இவ்வளவு பெரிய பரிசுத்தொகையை வென்றவர் யார் என்பது தெரியவராமை ஆச்சரியமளிப்பதாக குறித்த கடையின் உரிமையாளர் Sam Misiano தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனது கடையிலிருந்து அதிஷ்டலாபச்சீட்டுக்களை வாங்கியவர்கள் தமது இலக்கத்தைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அவர் ஊக்குவித்துள்ளார்.
இது ஒரு தனிநபருக்குச் சொந்தமானதாஅல்லது ஒரு குழுவிற்குச் சொந்தமானதா என்பது இதுவரை தெரியவரவில்லை.
இச்சீட்டிழுப்பில் வெல்லப்பட்ட தொகையை 6 மாதங்களுக்குள் எவரும் உரிமைகோராதபட்சத்தில் அது விக்டோரியாவின் State Revenue-விடம் ஒப்படைக்கப்படும். எனினும் பரிசுத்தொகைக்குரியவர் உரிய ஆதாரத்தைக் காட்டி இதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
