விக்டோரியா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பிலான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படவுள்ளதாக Premier Daniel Andrews இன்று அறிவித்தார்.
இதன்படி ஜுன் முதலாம் திகதியிலிருந்து Pubs, Cafes, மற்றும் உணவகங்களினுள் அமர்ந்து உண்ணலாம். மது அருந்தலாம். ஆனால் ஒரே நேரத்தில் குறித்த இடங்களினுள் இருப்பவர்களின் எண்ணிக்கை இருபதுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும் என்பதுடன் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவேண்டும்.
இந்த எண்ணிக்கை ஜுன் 22 முதல் ஐம்பதாக அதிகரிக்கப்படும் என்றும் ஜுலை இரண்டாவது வாரமளவில் 100 பேராக அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
கடந்த வாரம் விக்டோரியா மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் COVID-19 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்மூலம் சமூக பரவல் எண்ணிக்கை மிக மிக குறைந்த அளவில் இருப்பதையடுத்து கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு அரசு முடிவெடுத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை இன்றைய விக்டோரியாவில் புதிதாக 7 பேருக்கு கொரோனா வைரஸ் COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை விக்டோரியாவில் 1561 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
