விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 627 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அதேநேரம் மேலும் 8 பேர் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களில் 50 வயதுகளிலுள்ள இரு ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் நான்கில் ஒருவர் வீட்டில் தங்கியிருப்பதற்கு தவறுகின்றமை தெரியவந்துள்ளதாகவும், இச்செயற்பாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று எனவும் Premier Daniel Andrews தெரிவித்தார்.
புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையாததைத் தொடர்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்படும் வாய்ப்பு உள்ள அதேநேரம் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்படலாம் என குறிப்பிடப்படுகிறது.
தற்போது விக்டோரியா முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிலுள்ள 37 பேர் உட்பட 349 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
