விக்டோரியாவில் கடந்த இருபத்துநான்கு மணிநேரத்தில் 64 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் பாரதூரமான பரவல் ஏற்படுவதற்கு முன்னர் கொரோனா தொற்று அதிகம் செறிவடைந்துள்ள பிரதேசங்களில் உடனடி ஊரடங்கினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தனது ஆதரவினை விக்டோரிய Premier Daniel Andrews-இடம் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
விக்டோரியாவில் தொடருகின்ற இந்த பரவலை அடுத்து, ஏனைய மாநிலங்கள் எச்சரிக்கையடைந்துள்ளன.
தெற்கு ஆஸ்திரேலியா தனது எல்லைகளை அடுத்தமாதம் திறப்பதாக அறிவித்திருந்த முடிவினை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
குயின்ஸ்லாந்து மாநில எல்லைகள் எதிர்வரும் ஜுலை 10ம் திகதி ஏனைய மாநிலத்தவர்களுக்கு திறக்கப்படுகின்றது. ஆனால் விக்டோரிய மாநிலத்தவர்கள் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளார்கள்.
விக்டோரியா தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட தாக்குதலை எதிர்நோக்கியுள்ளதையடுத்து இதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்துமேற்கொள்வதில் மாநில Premier Daniel Andrews முனைப்புடன் செயற்படுகிறார்.
மத்திய அரசின் செயலணியினர் 800 பேர் இந்த விசேட பணிக்காக விக்டோரியாவுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
