விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அதேநேரம் மேலும் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
80 மற்றும் 90 வயதுகளிலுள்ள முதியவர்களே இவ்வாறு மரணமடைந்ததாகவும் இவர்கள் 6 பேரும் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தொற்றுக்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
விக்டோரியாவில் தொடர்ந்து 19வது நாளாக மூன்று இலக்கங்களில் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருகின்றனர்.
தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்களில் 206 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 41 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ளனர்.
இதுஒருபுறமிருக்க கொரோனா வைரஸ் சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாதவிடத்து, ஆஸ்திரேலிய இராணுவத்தினர் அவர்களைத் தேடி வீடுகளுக்கு வருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு பணிகளில் விக்டோரிய சுகாதாரத்துறையினருக்கு உதவவென 1400 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
