விக்டோரியா மாநிலத்தில் தொடர்ந்து 28 நாட்களாக புதிதாக COVID-19 தொற்றாளர்கள் பதிவாகாததையடுத்து, COVID-19 தொற்றை 'இல்லாதொழித்த' மாநிலமாக விக்டோரியா திகழ்கிறது.
ஆஸ்திரேலிய மாநிலம் அல்லது பிராந்தியம் ஒன்றில் தொடர்ந்து 28 நாட்களுக்கு சமூக பரவல் ஊடாக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படாதவிடத்து, அந்த மாநிலம் அல்லது பிராந்தியம் COVID-19 தொற்றை இல்லாதொழித்துவிட்டதாக கருதப்படும்.
இந்த வரைவிலக்கணத்திற்கு அமைய விக்டோரிய மாநிலம் அதிகாரப்பூர்வமாக COVID-19 தொற்றை இல்லாதொழித்த மாநிலமாக மாறியுள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 0 என்ற இந்த இலக்கை எட்டுவதற்கு விக்டோரிய மக்கள் கடந்துவந்த பாதை மிகக்கடினமானது என Premier Daniel Andrews தெரிவித்தார்.
அதேநேரம் கொரோனா அச்சுறுத்தல் இன்னமும் முடிந்துபோய்விடவில்லை என்பதால் பொதுமக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுஒருபுறமிருக்க கடந்த 8 மாதங்களின் பின்னர் டஸ்மேனியா மாநிலம் விக்டோரியர்களுக்கென தனது எல்லையைத் திறக்கிறது. நாளைமுதல் விக்டோரியர்கள் டஸ்மேனியா மாநிலத்திற்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி பயணம்செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத்வேல்ஸ் மற்றும் ACT எல்லைகள் விக்டோரிய மாநிலத்தவர்களுக்கென ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள அதேநேரம் குயின்ஸ்லாந்து எல்லை டிசம்பர் 1 முதல் திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
