ஒருவர் போதையில் வாகனம் ஓட்டுகிறாரா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்படும் breath test-சுவாசப் பரிசோதனையில் விக்டோரிய மாநில காவல்துறை ஏமாற்றுவேலையில் ஈடுபட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
5 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட 17.7 மில்லியன் சுவாசப் பரிசோதனை தரவுகளை ஆராய்ந்ததில், சுமார் 2 லட்சத்தி 58 ஆயிரம் பரிசோதனைகள் பொய்யாக மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த பரிசோதனைகளை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் தம்முடைய வாயை பரிசோதனைக் கருவியில் வைத்து ஊதியிருக்கலாம் என்றோ அல்லது ஊதுவதற்கான குழாயினை கைகளால் அழுத்திப் பிடித்திருக்கலாம் என்றோ நம்பப்படுகிறது.
இவர்கள் ஏன் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பது தொடர்பில் விக்டோரியாவின் முன்னாள் காவல்துறை ஆணையாளர் Neil Comrie தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை drug and alcohol bus-களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இத்தவறு நடைபெறவில்லை எனவும் பெரும்பாலும் general duties & highway patrol அதிகாரிகள் குறிப்பாக rural பகுதிகளில் கடமையிலிருந்த அதிகாரிகளே இந்தச் செயலில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமது அன்றாட பணி இலக்கினை அடையும் நோக்கிலும் பணிச்சுமையை குறைக்கும் நோக்கிலும் அவர்கள் இவ்வாறு நடந்திருக்கலாம் என சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விக்டோரிய காவல்துறையினரின் இச்செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து Transport Accident Commission விக்டோரிய காவல்துறைக்கான 4 மில்லின் நிதியுதவியை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
